Skip to main content

27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த ‘54 வயதான மன்மதராசா’ - வெளியான பல திடுக்கிடும் தகவல்

Feb 22, 2022 84 views Posted By : YarlSri TV
Image

27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த ‘54 வயதான மன்மதராசா’ - வெளியான பல திடுக்கிடும் தகவல் 

பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நபரை ஒரிசாவில் போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.



ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிதுபிரகாஷ் சுலைன் என்ற ரமேஷ் லைன் (54). இவர் படித்த படிப்போ பிளஸ் 2 தான். ஆனால் இவர் தன்னை ஹோமியோபதி டாக்டர் என்று கூறி, கடந்த 1982-ம் ஆண்டு ஒடிசாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவருடன் 20 ஆண்டுகள் குடும்பம் நடத்தினார்.



இந்த வாழ்க்கையில் திருப்தி இல்லாத பிதுபிரகாஷ், 2002-ம் ஆண்டு வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணிடம் முதல் திருமணத்தை மறைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். முதல் மனைவிக்கு 5 குழந்தைகள், 2-வது மனைவிக்கு குழந்தைகள் பிறந்தது. ஆனால், இவருக்கு ஆசை அடங்கவில்லை.



மறுபடியும் தன்னுடைய லீலையை ஆரம்பிக்கத் தொடங்கினார். 3-வது திருமணம் செய்ய மணப்பெண் தேவை என்றும், தன்னை டாக்டர் என்றும், மத்திய அரசின் குடும்ப நலத்துறையில் இயக்குனராக வேலை செய்வதாகவும், கை நிறைய சம்பாதிப்பதாகவும் கூறி தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்திருக்கிறார்.



இதை நம்பி பல பெண்கள், அவரை திருமணம் செய்ய முன் வந்துள்ளனர். கல்யாணம் செய்த பெண்களை புது புது இடங்களில் தங்க வைத்து குடும்பம் நடத்தி வருவாராம் இந்த மன்மத ராஜா. இவருடைய வலையில் படித்த பெண்கள், வக்கீல், ஆசிரியை உள்பட பல பெண்கள் விழுந்துள்ளனர். தன்னுடைய மோசடி தெரியாமல் இருக்க மாநிலம் விட்டு மாநிலம் சென்று பெண்களை திருமணம் செய்வதை இவர் வழக்கமாக வைத்து வந்துள்ளார்.



திருமணம் செய்யும் பெண்களை, அவர் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்து விட்டு, திருமணம் செய்து சில நாட்களில் அப்பெண்களிடம் நல்ல பெயரை எடுப்பாராம். இவரை முழுமையாக நம்பிய அப்பெண்கள் பணம், நகை கொடுத்துள்ளனர். பணம், நகைகளை வாங்கி ஓரிரு நாட்களிலேயே இவர் அப்பெண்களை கழட்டிவிட்டு தலைமறைவாகி விடுவாராம்.





2018-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த பள்ளி ஆசிரியரை இவர் கடைசியாக திருமணம் செய்துள்ளார். டெல்லியில் உள்ள கோவிலில் இவர் அப்பெண்ணை மாலை மாற்றி திருமணம் செய்துள்ளார். அன்று இரவு முதலிரவு நடத்தி விட்டு, ஆசிரியையிடம் நைசாக பேசி ரூ.10 லட்சம் நகை, பணத்தை வாங்கிக் கொண்டு மறுநாளே வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை இவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் தேட ஆரம்பித்தார்.



அப்போதுதான் அவருக்கு பிதுபிரசாத் சுலைன் பற்றிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தன்னை போல இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த புகைப்படங்கள் அதில் இடம் பெற்றன. இதனையடுத்து, அவர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை வழக்குப் பதிவு செய்த போலீசார் இவரை வலைவீசித் தேடி வந்தனர்.



புவனேசுவரில் வாடகைக் காரில் சென்றுக் கொண்டிருந்த பிபு பிரகாஷ்ஷை திடீரென போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.



இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுவரை பெண்களிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தெரிய வந்துள்ளது. 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பெண்களை பணத்துக்காக மணம் முடித்து இருப்பதாகவும், கேரளாவில் 13 வங்கிகளிடம் சுமார் 1 கோடி ரூபாய் மோடி செய்ததும், 128 போலி கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை